செய்திகள்
பல வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது - பிரதமர் மோடி
பல வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி:
அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாடு முழுவதும் இருந்து வருகை தந்துள்ள ஆன்மிக தலைவர்களுக்கு எனது வணக்கம். நாடு முழுவதும் ராம மயமாக இருக்கிறது. இப்படி ஒரு நன்னாள் வந்ததை பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி. உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. குமரி முதல் நாடு முழுவது ராமர் நாமம் ஒலிக்கிறது.
ராமர் கோயில் போராட்டத்தில் இருந்த உறுதி எவராலும் மறக்க முடியாது. பல வருட காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது. ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது.
சுதந்திரப் போராட்டம் போல் ராமர் கோவிலுக்காகவும் பலர் உயிர் நீத்துள்ளனர். ராமர் கோவிலுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு 120 கோடி மக்கள் சார்பில் நன்றி.
ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. வெறுப்புணர்வை மறந்து கோடிக்கணக்கானவர்களை இணைக்கும் சக்தி ராமருக்கு உண்டு என தெரிவித்துள்ளார்.