செய்திகள்
கார்த்திகா

வேப்பூர் அருகே பட்டாசு வெடித்து சிறுமி பலி

Published On 2020-11-18 13:39 GMT   |   Update On 2020-11-18 13:39 GMT
வேப்பூர் அருகே பட்டாசு வெடித்துச் சிதறியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
வேப்பூர்:

வேப்பூர் அருகே வரம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மனைவி அஞ்சம்மாள். இவர்களுக்கு கார்த்திகா(வயது 5) என்ற மகள் இருந்தாள். சரவணன் வெளிநாட்டில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அஞ்சம்மாள் தனது மகளுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அஞ்சம்மாள் தனது மகளை வீட்டில் விட்டு விட்டு அருகிலுள்ள வயலுக்கு சென்றார்.

வீட்டில் இருந்த கார்த்திகா, தீபாவளி பண்டிகையை கொண்டாட வாங்கி வைத்திருந்த பட்டாசு அட்டை பெட்டியை திறந்து, அதில் இருந்த மத்தாப்பு தீக்குச்சியை பற்ற வைத்தாள். அப்போது ஏற்பட்ட தீப்பொறி அட்டைபெட்டியில் இருந்த பட்டாசுகள் மீது பட்டு, படபடவென வெடித்துச் சிதறியது.

இதில் பலத்த தீக்காயமடைந்த சிறுமி வலியால் அலறி துடித்தாள். இதைகேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு சிறுமி மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி கார்த்திகா நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டாசு வெடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள், அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News