செய்திகள்
விஷம்

ஆனைமலை அருகே காதலிக்கு வேறொருவருடன் திருமணம்- லாட்டரி வியாபாரி தற்கொலை

Published On 2021-09-17 09:51 GMT   |   Update On 2021-09-17 09:51 GMT
ஆனைமலை அருகே காதலிக்கு வேறொருவடன் திருமணம் நடந்ததால் மனவேதனையில் இருந்த லாட்டரி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை மேட்டை சேர்ந்தவர் கோபாலசாமி. இவரது மகன் செல்வராஜ் (வயது 30). லாட்டரி வியாபாரி. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும், பல இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் செல்வராஜை சந்திக்க விடாமல் செய்தனர். இதனால் செல்வராஜ் தனது காதலியை சந்திக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் இளம்பெண்ணின் பெற்றோர் வேறொரு இடத்தில் மணமகன் பார்த்து கடந்த மாதம் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

தனது காதலிக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்ததால் செல்வராஜ் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

அதன்படி செல்வராஜ் கடைக்கு சென்று வி‌ஷத்தை வாங்கினார். பின்னர் வி‌ஷ பாட்டிலுடன் ஆனைமலை அருகே உள்ள மீனாட்சிபுரம் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்குள்ள பிளாட்பாரத்தில் வைத்து வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News