செய்திகள்
கைது

விருகம்பாக்கத்தில் ஆயுதங்களுடன் வாலிபர்கள் மோதல்: 2 பேர் கைது

Published On 2019-11-28 10:10 GMT   |   Update On 2019-11-28 10:10 GMT
விருகம்பாக்கத்தில் குடிபோதையில் ஆயுதங்களுடன் வாலிபர்கள் மோதிக்கொண்டனர். இதில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போரூர்:

விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் ஷேக் அப்துல்லா நகரில் நள்ளிரவு வாலிபர்கள் சிலர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென அவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.

இதில் அந்த பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த 2 ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த துணிக்கடை ஒன்றின் முன்பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்தனர்.

மேலும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் ஆயுதங்களை காட்டி மிரட்டினர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சேதம் அடைந்த ஆட்டோ உரிமையாளர் ஷேக் ஹமீது ஆகியோர் விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட அதே பகுதி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக்ராஜா, கே.கே.நகர் பரத் காலனியைச் சேர்ந்த ஆதித்யா ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டு தப்பிய 2 வாலிபர்களை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட கார்த்திக்ராஜா மீது விருகம் பாக்கம் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News