செய்திகள்
கென்யாவில் பேருந்து லாரி மோதல் - 12 பேர் பலி
கென்யாவில் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பலியாகினர்.
கிஷ்மு:
கென்யா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியா கவுன்டியிலிருந்து தலைநகர் நைரோபிக்கு நேற்று பேருந்து ஒன்று புறப்பட்டது. கிஷ்மு நகரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிஷ்மு-கெரிக்கொ நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது.
இரவு 11 மணியளவில், முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பலியாகினர். பேருந்தில் மொத்தம் 51 பயணிகள் இருந்தனர். லாரி மற்றும் பேருந்தின் ஓட்டுநர்கள் இருவருமே சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்து காரணமாக கென்யாவில் ஆண்டுக்கு 3,000 பேர் உயிரிழக்கின்றனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.