செய்திகள்
விபத்து

எட்டயபுரம் அருகே லாரி மோதி 2 வியாபாரிகள் பலி

Published On 2019-11-30 07:59 GMT   |   Update On 2019-11-30 07:59 GMT
எட்டயபுரம் அருகே சர்க்கரை ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 2 வியாபாரிகள் பலியாகினர்.
எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தெற்கு முத்தலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது55). அதே ஊரை சேர்ந்தவர் மலையாண்டி (47). இவர்கள் இருவரும் ஆட்டு வியாபாரம் செய்து வந்தார்கள். இன்று எட்டயபுரத்தில் ஆட்டு சந்தை என்பதால் அதிகாலையில் ஒரு ஆட்டை விற்பதற்காக முத்தலாபுரத்தில் இருந்து எட்டயபுரத்திற்கு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

மோட்டார் சைக்கிளை மலையாண்டி ஓட்டி சென்றார். முத்தலாபுரம் அருகே உள்ள எம்.கோட்டூர் விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து நெல்லைக்கு சர்க்கரை ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளின் பின்பக்கமாக மோதியது.

இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த இருவர் மீதும் லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் தலை நசுங்கி பலியானார்கள். தகவல் அறிந்த எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இருவரும் விபத்தில் உயிரிழந்த தகவலை கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. பலியான முருகனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். மலையாண்டிக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், கார்த்திக் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவரான எட்டயபுரம் மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்த மூக்கையா மகன் மகா குரு (25) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News