செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 45 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 45 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தினந்தோறும் கொரோனா தடுப்பூசி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மாநிலத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் முதல் தவணை தடுப்பூசியில் முதன்மை இடத்தை வகித்தாலும், 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு அதாவது 45 சதவீத இலக்கையே எட்டியுள்ளது.
இதுவரை 1,32,928 பேர் 2-வது தவணை கெரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். எனவே இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் சென்று முதல் மற்றும் நிலுவையில் உள்ள 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி ஒத்துழைப்பு நல்குங்கள். காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று 370 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.