விக்கிரவாண்டி அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளித்த வாலிபர் பலி
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரெட்டணை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 26) இவர் சென்னையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் தொண்டி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார்.
அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கூச்சல் போட்டனர். சத்தம்கேட்டு அக்கம், பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். ஆனால் செல்வம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். வீடு திரும்பிய அவரது நண்பர்கள் ஊருக்குள் இந்த தகவலை தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பெற்றோர், பெரியதச்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் திண்டிவனம் தீயணைப்பு படை வீரர்களுடன் இணைந்து செல்வத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். செல்வம் அந்த பகுதியில் உள்ள தடுப்பணையில் சிக்கி இருக்கலாம் என கருதினர்.
அங்கு தீயணைப்பு படையினர் தேடிபார்த்தனர். ஆனால் அவரது கதி என்ன? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இன்று காலை செல்வம் ஆற்றில் குளித்த பகுதியிலேயே பிணமாக மிதந்தார்.
இவரது உடலை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். செல்வத்தின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது அந்த பகுதி மக்களை சோகததில் ஆழ்த்தியது.