செய்திகள்
2லட்சத்து 36ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 2லட்சத்து 36ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டது. பாதிப்பு எண்ணிக்கை 2ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது தடுப்பு பணிகள் காரணமாக தொற்று கட்டுக்குள் வர ஆரம்பி த்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்படுவதால் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன.
இதனிடையே மாவட்டத்தில் இதுவரை 2லட்சத்து 36ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தடுப்பூசிகள் வராததால் பொதுமக்களுக்கு செலுத்தவில்லை. போதிய அளவு தடுப்பூசிகள் வரவழைத்து பொது மக்களுக்கு செலுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.