செய்திகள்
மத்திய அரசு

முழுமையான ஆய்வு முடியும் முன்பே கொரோனா மருந்தை ஆபத்தான நோயாளிகளுக்கு வழங்க திட்டம்- மத்திய அரசு ஆலோசனை

Published On 2020-09-14 10:25 GMT   |   Update On 2020-09-14 10:29 GMT
உயிர் இழப்பு தவிர்க்க முடியாது என்ற ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு முழுமையான சோதனை முடியாத தடுப்பு மருந்துகளை வழங்கலாமா? என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

புதுடெல்லி:

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலகம் முழுவதும் நடந்து வருகிறது. பல நாடுகள் மருந்தை கண்டுபிடித்து சோதனை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவும் மருந்தை உருவாக்கி சோதனை நடத்தி வருகிறது. ஆனாலும், இதுவரை கொரோனாவுக்கு சரியான தடுப்பு மருந்தை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

இன்னும் சில மாதங்களில் மருந்து பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்த்தன் கூறும் போது, இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் மருந்து பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று கூறினார்.

பொதுவாக தடுப்பு மருந்துகளை மனிதனுக்கு செலுத்தி 3 கட்ட சோதனை நடத்த வேண்டும். அனைத்து சோதனையும் வெற்றிகரமாக அமைந்து அதற்கு மருந்து கட்டுப்பாடு அமைப்புகள் அனுமதி அளித்தால் தான் பயன்படுத்த முடியும்.

ஆனால், பல மருந்துகள் 1-ம், 2-ம் கட்ட சோதனைகளில் வெற்றி அடைந்துள்ளது. 3-ம் கட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.

கொரோனா நோய் கடுமையாக தாக்கிய பல நபர்கள் உயிர் இழந்து வருகிறார்கள். அதிக வயதானவர்களும் உயிர் இழக்கிறார்கள்.

எனவே, உயிர் இழப்பு தவிர்க்க முடியாது என்ற ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு முழுமையான சோதனை முடியாத தடுப்பு மருந்துகளை வழங்கலாமா? என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறினார்.

இதுபற்றி விரிவாக ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இது போல் முழுமையாக ஆய்வு முடிக்கப்படாத மருந்துகளை ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு வழங்குவது என முடிவு செய்துள்ளனர்.

அதை இந்தியாவிலும் பின்பற்றலாம் என்ற எண்ணத்துடன் இந்த ஆலோசனை நடந்து வருகிறது.

Tags:    

Similar News