செய்திகள்
இஸ்ரேலில் இருந்து பக்ரைன் புறப்பட்ட விமானம்

இஸ்ரேல்-பக்ரைன் இடையே முதல் முறையாக நேரடி விமானப்போக்குவரத்து தொடக்கம் - வரலாற்று நிகழ்வு

Published On 2020-09-23 23:08 GMT   |   Update On 2020-09-23 23:08 GMT
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பக்ரைனுக்கும் நேரடி விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டது.
ஜெருசலேம்:

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன் பயனாக 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தன.

ஆனால், பிற அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தன.

இதையடுத்து, அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் கடந்த 15 ஆம் தேதி இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.



இதையடுத்து, இந்நாடுகள் இடையே அமைதி ஏற்பட வழி பிறந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டு அந்நாட்டுடன் விமானப்போக்குவரத்து, தூதரக நடவடிக்கைகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறையில் இணைந்து செயல்பட ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், பக்ரைன் மற்றும் இஸ்ரேல் இடையே பல ஆண்டுகளாக விமானப்போக்குவரத்து நடைபெறாமல் இருந்தது. ஆனால், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பக்ரைன் நாட்டிற்கு நேற்று முதல் நேரடி விமானப்போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் நாட்டுக்கு சொந்தமான விமானம் பல்வேறு முக்கிய அதிகாரிகளுடன் நேற்று பக்ரைன் நாட்டை வந்தடைந்தது. இந்த விமானத்தில் அமெரிக்க அதிபரின் முக்கிய அதிகாரிகளும், இஸ்ரேல் பிரதமரின் முக்கிய அதிகாரிகளும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைதி ஒப்பந்தத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் விமானப்போக்குவரத்து பக்ரைன் நாட்டுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை நிலைநாட்ட உதவும் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளும் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் நாட்டிற்கும் பக்ரைன் நாட்டிற்கும் இடையே முதல் முறையாக நேரடி விமானப்போக்குவரத்து நடைபெற்றுள்ள நிகழ்வு மத்திய கிழக்கு நாடுகளின் அமைதியை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஏற்கனவே நேரடி விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News