செய்திகள்
விஜய் மல்லையாவை திவாலானவராக அறிவித்தது லண்டன் ஐகோர்ட்
தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் மல்லையா தொடுத்துள்ள வழக்கு இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
லண்டன்:
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்றார்.
அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து அவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை இங்கிலாந்து அரசு கைது செய்தது. மேலும் அவரை நாடு கடத்த லண்டன் கோர்ட்டும் உத்தரவிட்டது. இதையடுத்து இங்கிலாந்து அரசும் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, ஜாமீனில் உள்ள விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் விசாரணை நடந்து வருகிறது.
அதே சமயத்தில் விஜய் மல்லையாவை திவாலானவராக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க லண்டன் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.