செய்திகள்
கணவன்-மனைவி இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப் பட்டதில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பனங்காடு காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40), தச்சு தொழிலாளி. இவரது மனைவி பூர்ணிமா (36 ). இவர்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சக்திவேலுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார். இதனிடையே அவரது மனைவி பூர்ணிமாவுக்கும் சளி, காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பூர்ணிமா இறந்தார். இன்றுஅதிகாலை சக்திவேலும் இறந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு கணவன்-மனைவி பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.