உள்ளூர் செய்திகள்
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு வீடாக சென்று பூஸ்டர் தடுப்பூசி
தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரந்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாமில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாநகரில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் மாநகர் பகுதியில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் ஈடுபட்டு வருகிறார். அதன்படி வீடு வீடாக சென்று 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக இலவச தொலைபேசி எண் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் சுகாதாரப் பணியாளர்கள் நேரடியாக முதியவர்களின் வீடுகளுக்கு சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவார்கள்.
இதற்காக 2 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. நாளை அல்லது 2 நாட்களில் இப்பணிகள் திருப்பூர் மாநகரில் தொடங்க உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தெரிவித்தார்.