திண்டுக்கல் அருகே லாரிகள் மோதிக்கொண்டதில் டிரைவர் பலி
கன்னிவாடி:
பொள்ளாச்சி அருகே உள்ள மாமாரத்துப் பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). இவர் ஒரு லாரியில் திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு சென்று கொண்டு இருந்தார். லாரியில் கிளீனராக சுப்பிரமணி (வயது 65) இருந்தார். திண்டுக்கல் - பழனி சாலையில் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி அருகே வந்து கொண்டு இருந்த போது பெருந்துறையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த லாரி இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மணிகண்டன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான பால முருகன் (25) என்பவர் தப்பி ஓடி விட்டார். ரெட்டியார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றார். 2 லாரிகளும் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.