ஆன்மிகம்
நூபுர கங்கை தீர்த்தத்தில் சர்வ அலங்காரத்தில் ராக்காயி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அழகர்கோவிலில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம்

Published On 2019-07-20 04:47 GMT   |   Update On 2019-07-20 04:47 GMT
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அழகர்கோவிலில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. இங்கு ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலையில் இருந்து மாலை வரை ஏராளமான பக்தர்கள் புனிதநீராடினர். பின்னர் அங்கு எலுமிச்சம் பழம், ரோஜா மாலைகளுடன் சர்வ அலங்காரத்தில் ராக்காயி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து அருகில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் மூலவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணியசாமி, வித்தக விநாயகர் மற்றும் ஆதிவேல் சன்னதிகளில் விசேஷ பூஜைகளும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தன. இங்கும் பக்தர்கள் நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத சுந்தரராச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தன. மேலும் கல்யாணசுந்தரவல்லிதாயார், ஆண்டாள் மற்றும் சக்கரதாழ்வார் சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

இக்கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, கண்காணிப்பாளர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்
Tags:    

Similar News