ஆன்மிகம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நிறைவு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நிறைவு

Published On 2021-09-09 03:16 GMT   |   Update On 2021-09-09 03:16 GMT
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நிறைவடைந்ததையடுத்து அன்னையின் கொடி இறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்க வேளாங்கண்ணி பகுதியை சுற்றி உள்ள 19 வழிகளும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் பக்தர்கள் இன்றி நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

காலையில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில் நன்றி அறிவிப்பு ஜெபம் செய்து அன்னையின் கொடி இறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

பின்னர் பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பும், தமிழில் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. விழாவில் பேராலய அதிபர் பிரபாகர், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News