செய்திகள்
தூத்துக்குடி அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அண்ணா புதுத்தெருவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக தூத்துக்குடி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நடந்து வந்த 2 பேர் தப்பி ஓட முயற்சித்தனர், அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், கழுகுமலை காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த சேகர் (வயது 56) மற்றும் அண்ணா மேலத் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் (54) என்பதும், அவர்கள் அ.ம.மு.க. கட்சிக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வாக்காளர் பெயர் பட்டியலுடன் கூடிய சிறிய நோட்டு மற்றும் ரூ.48,500 வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படை குழுவினர் அவர்கள் இருவரையும் பிடித்து கழுகுமலை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட பணத்தை கோவில்பட்டி உதவி தேர்தல் அதிகாரியான தாசில்தார் அமுதாவிடம் ஒப்படைத்தனர்.