உலகம்
பாகிஸ்தானில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல்

பாகிஸ்தானில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல்

Published On 2021-12-08 05:28 GMT   |   Update On 2021-12-08 05:28 GMT
பாகிஸ்தானில் உள்ள கடை ஒன்றில் திருடியதாக ஒரு இளம்பெண் உள்பட 4 பெண்களை சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லாகூர்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உள்ள ஒரு கடைக்கு 4 பெண்கள் சென்றனர். அப்போது அவர்கள் கடையில் பொருட்களை திருடியதாக பிடிக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கு பலர் கூடினார்கள். அவர்கள் ஒரு இளம்பெண் உள்பட 4 பெண்களையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்களது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தினார்கள்.

அப்பெண்கள் தங்களது ஆடைகளை திரும்பத்தரும் படி அங்கிருந்த கும்பலிடம் கெஞ்சினார்கள். தங்களை விட்டு விடும்படி கதறி அழுதார்கள். ஆனால் எதையும் கண்டு கொள்ளாத கும்பல் 4 பெண்களையும் சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாக அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தின் 2 வீடியோக்கள் சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. அதில் 4 பெண்கள் கம்பால் தாக்கப்படுவதும், ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும்போது, ‘பைசலாபாத்தில் உள்ள பாவாசாக் சந்தைக்கு நாங்கள் சென்ற போது தாகம் எடுத்ததால் எலக்ட்ரிக் கடை ஒன்றுக்குள் சென்று தண்ணீர் பாட்டில் கேட்டோம்.

ஆனால் நாங்கள் திருடும் நோக்கத்தில் கடைக்குள் நுழைந்ததாக அதன் உரிமையாளர் குற்றம் சாட்டினார். பின்னர் அவர்கள் எங்களை சரமாரியாக தாக்கினார்கள். எங்களை நிர்வாணப்படுத்தி வீடியோக்களையும் எடுத்தனர். இந்த கொடுமையை யாரும் தடுக்க முன்வரவில்லை’ என்றார்.


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறும்போது, இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் 5 முக்கிய குற்றவாளிகளை கைது செய்து உள்ளோம். தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என்றார். 

இதையும் படியுங்கள்...மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை- போக்குவரத்துத்துறை

Tags:    

Similar News