செய்திகள்
சாதிக்பாட்சா

வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி பலி: கும்பகோணம் நகராட்சி ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்கு

Published On 2019-11-15 10:26 GMT   |   Update On 2019-11-15 10:26 GMT
கும்பகோணத்தில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பலியான சம்பவத்தில் நகராட்சி ஆணையர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:

கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியை தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கும்பகோணம் ரெயில்வே ஸ்டே‌ஷன் எதிரே உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதாக தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தனியார் நிறுவன கழிவுநீர் அடைப்பு எந்திரமான காமி என்ற வாகனத்துடன் ஒப்பந்த தொழிலாளர்கள் குடி தாங்கியை சேர்ந்த ராஜா தலைமையில் வீரமணி மற்றும் மேலக்காவேரி தங்கையா நகரைச் சேர்ந்த சாதிக்பாட்சா (வயது 55) உள்பட 4 பேர் கழிவுநீர் அடைப்பு எடுப்பதற்காக பாதாள சாக்கடை கிணற்றில் இறங்கினர்.

அப்போது சாதிக் பாட்ஷா வி‌ஷவாயு தாக்கி பாதாள சாக்கடை கிணற்றில் விழுந்தார். இதனால் பதட்டமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் என்ன செய்வதென்று அறியாமல் தவித்தனர். இதனால் பாதாள சாக்கடையில் விழுந்த சாதிக் பாட்ஷாவை இரண்டு மணி நேரமாக வெளியே எடுக்க முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி, வக்கீல்கள் விவேகானந்தன், இளங்கோவன் மற்றும் சமூக ஆர்வலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ரெயில்வே ஸ்டே‌ஷன் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கும்பகோணம் டி.எஸ்.பி. இளங்கோவன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அன்பழகன் எம்.எல்.ஏ, நகர்நல அலுவலர் பிரேமா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து பாதாள சாக்கடையில் விழுந்த சாதிக் பாட்ஷாவை தீயணைப்பு துறையினர் தேடினர். சுமார் அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு சாதிக் பாட்சா உடலை இறந்த நிலையில் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சாதிக் பாட்ஷா தாயார் ஷாரியா கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தொழிலாளர் நல சட்டத்தின் கீழ், நகராட்சி ஆணையர், நகர் நல அலுவலர், சுகாதார கண்காணிப்பாளர், ஒப்பந்ததாரர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News