செய்திகள்
முல்லைபெரியாறு அணையின் தோற்றத்தை போன்று தமுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு அலங்காரத்தை படத்தில் காணலாம்.

முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2020-12-03 20:53 GMT   |   Update On 2020-12-03 20:53 GMT
முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
மதுரை:

முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும் அவர் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.

மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1,296 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் 4 சிப்பங்களாக செயல்படுத்தப்படுகிறது. அதற்கான டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதன்தொடர்ச்சியாக இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு நடக்கிறது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் அவர் இந்த விழாவில் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் உள்பட ரூ.69 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, வேலுமணி, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவிற்காக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்பு, கலெக்டர் அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டித்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் பார்வையிடுகிறார்.
Tags:    

Similar News