செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் தூள் மூட்டைகளை காணலாம்

முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் கேட்பாரற்று கிடந்த 180 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

Published On 2021-08-18 10:04 GMT   |   Update On 2021-08-18 10:04 GMT
மஞ்சள் மூட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வனத்துறையினருக்கு அலையாத்திகாடுகளான தொண்டியக்காடு பீட், வெட்டுவாய்க்கால் அருகே உள்ள கடல் முகத்துவார பகுதியில் மஞ்சள் மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் தஞ்சாவூர் மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், திருவாரூர் மாவட்ட வன அலுவலர் அறிவொளி ஆகியோர் உத்தரவின் பேரில் முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் (ரேஞ்சர்) தாஹீர் அலி, வனவர் பெரியசாமி மற்றும் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட அலையாத்தி காட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு புதரில் 180 கிலோ எடையிலான 9 மஞ்சள் தூள் மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அந்த மஞ்சள் தூள் மூட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து முத்துப்பேட்டை வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது.

மஞ்சள் தூள் மூட்டைகளை அலையாத்திக்காட்டில் பதுக்கி வைத்தது யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த மஞ்சள் தூள் மூட்டைகள் இலங்கைக்கு கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் கேட்பாரற்று கிடந்த 180 கிலோ மஞ்சள் தூள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News