செய்திகள்
பாஜகவில் இணைந்த முகுல் ராய்

பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்

Published On 2021-06-11 11:44 GMT   |   Update On 2021-06-11 11:44 GMT
நடந்து முடிந்த மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் முகுல் ராய், கிருஷ்ணா நகர் உத்தர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
கொல்கத்தா:

பாஜக தேசிய துணைத் தலைவராக செயல்பட்டு வந்தவர் முகுல் ராய். மேற்கு வங்காளத்தை சேர்ந்த 67 வயதான முகுல் ராய், 1998 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகிய அவர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

1998 முதல் திரிணாமுல் காங்கிரசில் இருந்துவந்த முகுல் ராய் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், இவர் சில பாஜக தலைவர்களையும் சந்தித்தார். இதனால், 2015 ஆம் ஆண்டு முகுல் ராயை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் மம்தா பானர்ஜி நீக்கினார். 

இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு முகுல் ராய் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

மேலும், அவர் நடந்து முடிந்த மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் கிருஷ்ணாநகர் உத்தர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

இந்த நிலையில், பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் தனது மகன் சுப்ரான்ஷூவுடன் இன்று பிற்பகல் கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியை சந்தித்தார். பின்னர், மம்தா முன்னிலையில் முகுல் ராய் மற்றும் அவரது மகன் சுப்ரான்ஷூ இருவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 



அவர்கள் இருவரையும் மம்தா பானர்ஜி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். முகுல் ராய் கட்சியில் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் மம்தா கூறினார்.

பாஜகவின் முக்கிய தலைவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியது மேற்கு வங்காள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News