செய்திகள்
கோப்புப்படம்

காதல் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து எரித்த கணவன்

Published On 2021-09-25 10:14 GMT   |   Update On 2021-09-25 10:14 GMT
சிறுநீரக பாதிப்பால் விரைவில் இறக்க போவதாக நினைத்து காதல் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து எரித்த கணவன், குழந்தையுடன் தற்கொலை செய்வதாக வீடியோ வெளியிட்டு தலைமறைவாகி உள்ளார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் மகன் சத்தியமூர்த்தி (30). திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் பகுதியில் வாகன ஓட்டுனர் பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி திவ்யா (24). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வர்ஷினி ஸ்ரீ (3) என்கிற மகள் உள்ளார்.

திவ்யா திருப்பத்தூர் குனிச்சி பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எட்., கல்லூரியில் பயின்று கடந்த வருடம் கல்வியை முடித்துள்ளார். கல்லூரிக்கு செல்வதற்காக கந்திலி அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தில் உள்ள அவருடைய தாய் வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார். பின்னர் கணவர் வீட்டுக்கு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று சத்தியமூர்த்தி, திவ்யா மற்றும் அவரது குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

இன்று அதிகாலை கோவிலுக்கு செல்வதாக கூறி திவ்யா மற்றும் குழந்தையை வெளியே அழைத்து சென்றார்.

அப்போது திவ்யாவுக்கு குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் திவ்யா மயங்கினார். திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சத்தியமூர்த்தி திவ்யா மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார்.

உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. திவ்யா அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சத்தியமூர்த்தி அங்கிருந்து குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார்.

திவ்யாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

எரிந்த நிலையில் இருந்த திவ்யாவிடம் எலவம்பட்டி பகுதி கிராம நிர்வாக அலுவலர் வாக்குமூலம் பெற்றார். அப்போது தனது கணவர் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயக்கம் அடைந்த பிறகு தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறியுள்ளார்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குழந்தையுடன் மாயமான சத்தியமூர்த்தி என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவர் செல்போனில் இருந்து வீடியோ ஒன்றை உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில் தனக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரம் அடைந்ததால் நீண்ட காலம் வாழ முடியாது.

மனைவியை தீவிரமாக காதலிக்கிறேன் அவரை விட்டு பிரிந்து வாழ முடியாது. எனவே மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து மயக்க நிலையில் இருந்த பொழுது பெட்ரோல் ஊற்றி எரித்தேன். குழந்தையுடன் நானும் தற்கொலை செய்துகொள்வேன் என கூறியுள்ளார்.

சம்பவம் அறிந்த கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News