உள்ளூர் செய்திகள்
தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
தொடர் பண்டிகைகள் எதிரொலி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு - பிச்சி பூ கிலோ ரூ.2500-க்கு விற்பனை
கன்னியாகுமரி:
நாகர்கோவிலை அடுத்த தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
தோவாளை மார்க்கெட்டிற்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். பண்டிகை நாட்களில் இங்கு பூக்களின் விற்பனை களை கட்டும்.
பூக்களை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் தோவாளை வருவார்கள்.
தற்போது சித்திரை விஷூ, தமிழ் புத்தாண்டு, கோவில் விழாக்கள் மற்றும் ஈஸ்டர் பண்டிகை என அடுத்தடுத்து பண்டிகைகள் வந்ததால் பூக்களின் தேவை அதிகரித்தது.
இதனால் பூக்களின் விலையும் கிடு, கிடுவென உயர்ந்தது. அதன்படி இன்று காலை தோவாளை மார்க்கெட்டில் பிச்சி பூ கிலோ ரூ.2500-க்கு விற்பனை ஆனது.
மற்ற பூக்களின் விலை விபரம் வருமாறு:-
மல்லி கிலோ ரூ.500. சம்பங்கி - ரூ.200, முல்லை - ரூ.2200, கிரேந்தி - ரூ.100, மஞ்சள் கிரேந்தி - ரூ.100, ரோஜா ரூ.140, கனகாம்பரம் - ரூ.300, வாடா மல்லி - ரூ.50, துளசி - ரூ.60, அரளி - ரூ.250 -க்கு விற்பனை ஆனது.