செய்திகள்
முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு முகாம் வெறிச்சோடி கிடக்கும் காட்சி.

முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படுமா?- சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

Published On 2020-11-21 04:43 GMT   |   Update On 2020-11-21 04:43 GMT
முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கூடலூர்:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதுடன் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இதேபோல் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது.

தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் நீலகிரியில் உள்ள சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அத்துடன் நீலகிரிக்கு வர இ-பாஸ் பெறும் நடைமுறையும் எளிதாக்கப்பட்டு உள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்குள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். தற்போது அது கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. மேலும் யானை சவாரி, வனத்துக்குள் சென்று வனவிலங்குகளை பார்வையிடுதல் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த பணிகள் நடைபெறவில்லை. அவை அனைத்தும் வெறிச்சோடி கிடக்கிறது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே முதுமலை புலிகள் காப்பகத்தை திறந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, புலிகள் காப்பகம் பல மாதங்களாக மூடி கிடப்பதால் அடர்ந்த வனம் மற்றும் வனவிலங்குகளை காண்பதற்காகவும், வளர்ப்பு யானைகளை கண்டு ரசிக்கவும் முடியாமல் உள்ளது. எனவே புலிகள் காப்பகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, புலிகள் காப்பகத்தை திறப்பது குறித்து அரசு உத்தரவிட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இதுவரை அதற்கான உத்தரவு வரவில்லை என்றனர்.
Tags:    

Similar News