இந்தியா
கோப்புப்படம்

திரிபுராவில் பாலினத்தை நிரூபிக்க திருநங்கைகளிடம் ஆடைகளை களைய சொன்ன போலீசார்

Published On 2022-01-12 07:17 GMT   |   Update On 2022-01-12 07:17 GMT
பணம் பறிப்பு குற்றச்சாட்டில் நான்கு திருநங்கைகளை பாலினத்தை நிரூபிக்க போலீசார் ஆடைகளை களைய சொன்ன விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் கடந்த சனிக்கிழமை இரவு நான்கு திருநங்கைகள் ஒட்டலில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது மிரட்டி பணம் பறிப்பதாக குற்றம்சாட்டி போலீசார் நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு ஆண் மற்றும் பெண் போலீசார் முன்னிலையில் பாலினத்தை நிரூபிக்க ஆடைகளை கழற்ற வற்புறுத்தியுள்ளனர். அவர்களும் வேறு வழியின்றி தர்மசங்கடத்துடன் ஆடைகளை கழற்றியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த நான்கு பேரில் ஒருவர், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் திரிபுராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இனிமேல் கிராஸ்-ஆடை அணியமாட்டோம், ஒருவேளை அப்படி அணிந்து அகர்தலாவில் பார்க்கப்பட்டால், கைது செய்யப்படுவீர்கள் என எழுதி வாங்கியுள்ளனர். இந்த சம்பவம் நடைபெறும்போது புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரும் போலீசாருடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், போலீசார் அவர்களிடம் உள்ளாடைகளையும், விக்குகளையும் வாங்கி வைத்துள்ளதுதான். மேலும், முக்கிய காரணமாக அந்த புகைப்பட ஊடகவியலாளர்தான் என புகாரில் தெரிவித்துள்ளனர்.

எந்த ஆதாரமும் இல்லாமல் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என பாதிக்கப்பட்ட திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நான்கு பேரும், உச்சநீதிமன்றத்தின் தேசிய சட்ட சேவைகள் ஆணைய தீர்ப்பின் 377-வது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட தனியுரிமைக்கான உரிமை மீறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் திருநங்கைகளை ‘மூன்றாம் பாலினமாக’ அறிவித்து, அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் சமமாக பொருந்தும் என்று உறுதிசெய்து, அவர்களின் பாலினத்தை ஆண், பெண் அல்லது மூன்றாம் பாலினமாக அடையாளம் காணும் உரிமையை அவர்களுக்கு வழங்கியது.

புகைப்பட ஊடகவியலாளர் நான்கு பேருடன் ஹோட்டலில் நடனமாட விரும்பியுள்ளார். அவருடன் நான்கு பேரும் ஆட்டம் போட விரும்பவில்லை. இதனால் அவர்களை கேலி செய்துள்ளார்.  ஹோட்டலில் இருந்து பின்தொடர்ந்து வந்துள்ளார். அவர்களை தொட முயற்சித்துள்ளா். பின்னர், போலீஸ் அதிகாரிகளுடன் பின்தொடர்ந்து மேலார்மத் பகுதியில் நான்கு பேரையும் பிடித்தனர் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News