செய்திகள்
வைகை அணை

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

Published On 2020-09-14 07:51 GMT   |   Update On 2020-09-14 07:51 GMT
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
கூடலூர்:

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக கடந்த மாதம் அணையின் நீர் மட்டம் ஒரே வாரத்தில் 22 அடி வரை உயர்ந்தது. இதனையடுத்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டது. மேலும் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கன மழை பெய்ததால் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்து 60 அடியை தாண்டியது.

இதனால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக கடந்த மாதம் 13-ந் தேதி வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீர் வரத்து குறைந்து வருவதாலும் நேற்று முதல் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 61.68 அடியாக உள்ளது. நீர் வரத்து 910 கன அடி. இருப்பு 3931 மில்லியன் கன அடி.

பெரியாறு அணையின் நீர் மட்டம் 126.05 அடி. வரத்து 1703 கன அடி. திறப்பு 1200 கன அடி. இருப்பு 3845 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 45.40 அடி. வரத்து 71 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 122.01 அடி. வரத்து 9 கன அடி. திறப்பு 3 கன அடி.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுருளி அருவி, கும்பக்கரை ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு இங்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் அமைதியாக கடந்து செல்கிறது.

பெரியாறு 26, தேக்கடி 28, கூடலூர் 10, சண்முகாநதி அணை 9, உத்தமபாளையம் 4.3, வீரபாண்டி 52, வைகை அணை 1.6, மஞ்சளாறு 3, கொடைக்கானல் 5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News