செய்திகள்
பல்லடம் அருகே நீரோடைகளில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
சுக்கம்பாளையத்தில் இருந்து செம்மிபாளையம் செல்லும், ரோட்டின் ஓரம் நீர் வழிப்பாதை அமைந்துள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தில் உள்ள நீரோடையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
சுக்கம்பாளையத்தில் இருந்து செம்மிபாளையம் செல்லும், ரோட்டின் ஓரம் நீர் வழிப்பாதை அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இதில் மழைநீர் சென்று அருகில் உள்ள குட்டையில் கலக்கிறது.
இந்தநிலையில் அந்த நீர் வழிப்பாதையில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர்.
இதனால் மழைநீர் செல்ல வழியில்லாமல் ரோட்டில் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுவிடும்.
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி நிர்வாக அலுவலகம் அருகிலேயே நடைபெறும் இந்த சுகாதார சீர்கேட்டை உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். இல்லாவிடில் நீர்வழிப் பாதைகள், குப்பை கொட்டும் இடமாக மாறி விடும் என அவர்கள் தெரிவித்தனர்.