செய்திகள்
துருக்கி நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மெவுல்ட் காவ்சக்லோ

டிரம்பின் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம், சிரியா மீதான தாக்குதல் தொடரும் - துருக்கி

Published On 2019-10-11 07:26 GMT   |   Update On 2019-10-11 07:26 GMT
டிரம்பின் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் என்றும், சிரியா மீதான தாக்குதல் தொடரும் என்றும் துருக்கி கூறி உள்ளது.
அங்காரா:

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஷ் போராளிகள்  இருப்பிடங்களில் நடத்திய தாக்குதல்களில் குர்து போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகினர். 

துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில்,  துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

ஆனால், இந்த எச்சரிக்கையை துருக்கி அரசு கண்டுகொள்ளவில்லை. ‘அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி எங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம். குர்து போராளிகள் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை’ என துருக்கி நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மெவுல்ட் காவ்சக்லோ தெரிவித்துள்ளார்.

துருக்கி ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை 181 குர்து போராளிகள் அமைப்பு மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 174 குர்திஷ்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News