செய்திகள்
விபத்துக்குள்ளான பஸ்

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் பயணித்த பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

Published On 2021-01-03 11:06 GMT   |   Update On 2021-01-03 11:11 GMT
கேரளாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் பயணித்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் கர்நாடகாவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் கசரக்கோடு மாவட்டம் பனத்தூர் எழுக்கொச்சி பகுதியில் இன்று ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக மணப்பெண் வீட்டு உறவினர்கள் தங்கள் சொந்த ஊரான கர்நாடக மாநிலம் சுலியா பகுதியில் இருந்து பஸ் மூலம் பனத்தூர் திருமணம் நடைபெறவிருந்த பனத்தூர் எழுக்கொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அந்த பஸ்சில் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மணப்பெண் வீட்டார் பயணம் செய்த பஸ் கேரளாவின் பரியரம் என்ற பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி சற்று பள்ளமான பகுதியில் அமைந்திருந்த வீடு மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்துக்குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை மீட்டு கசரக்கோடு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனாலும், இந்த கோர விபத்தில் சிக்கி பஸ்சில் பயணம் செய்தவர்களில் 2 ஆண்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் உடல்நசுங்கி 
பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆகும். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண விழாவில் பங்கேற்க சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News