செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 741 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 741 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 262 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கையாகவும், சாலை விபத்துகளை தடுக்கவும் தேசிய நெடுஞ்சாலைகளில் 2 கிலோ மீட்டருக்கு ஒரு வேகத்தடை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும் இளைஞர்கள் விதிமுறைகளை மீறி வாகனத்தில் சென்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், மீஞ்சூர், கடம்பத்தூர், மப்பேடு, வெள்ளவேடு, மணவாளநகர் போன்ற இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்டம் முழுவதும் விதிமுறைகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 741 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதோடு மட்டுமில்லாமல் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், மோட்டார் சைக்கிளில் 3 பேர் அமர்ந்து செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டோரின் 262 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.