செய்திகள்
வெள்ளகோவில் அருகே அரசு பஸ்-வேன் மோதல்: வேன் டிரைவர் பலி
வெள்ளகோவில் அருகே அரசு பஸ்சும், வேனும் மோதி கொண்ட விபத்தில் வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளகோவில்:
கோவையில் இருந்து கரூர் நோக்கி மினிவேன் ஒன்று சென்றது. இந்த வேன் நேற்று இரவு 11 மணியளவில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே குருக்கத்தி என்ற இடத்தில் வந்தது. அப்போது எதிரே கரூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும், வேனும் மோதி கொண்டது. இதில் வேனை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த சரவணன்(40) பலத்த காயம் அடைந்தார். பஸ் கண்டக்டர் உள்பட 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வேன் டிரைவர் சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.