சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு 15 நாளில் 1 லட்சத்து 30 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகம்
சென்னை:
கஷ்ட காலங்களில் கை கொடுத்து உதவுவதில் சென்னை இளைஞர்களை அடிச்சுக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு சென்னை பெரு வெள்ளத்தின் போது அவர்களது சேவை இருந்தது.
அதே போல் இப்போதும் கொரோனா ஊரடங்கில் முடங்கியதால் தெருவில் வசிக்கும் பலர் ஒரு வேளை உணவுக்கு கூட திண்டாட நேர்ந்தது.
அவர்களின் பசிப்பிணியை போக்க 25 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்றாக கரம் சேர்த்து ஒரே குடையின் கீழ் இணைந்தன.
தனித்தனியாக உணவு விநியோகம் செய்தபோது ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் விநியோகிப்பது, உணவை வீணாக்குதல் ஆகியவற்றை பார்த்து இந்த நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து தொண்டர்கள் போர்அறை என்ற ஒரே குடையின் கீழ் பணிபுரிய தொடங்கியதாக ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் கூறினார்.
சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் இந்த குழுவினர் 15 மண்டலங்களுக்கும் உணவு விநியோகிக்க தனி தனி குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒரு சில நிறுவனங்கள் சொந்த வேன் வைத்துள்ளனர். மாநகராட்சி 10 வேன்களை வழங்கி இருக்கிறது. இந்த வேன்கள் மூலம் உணவு பொட்டலங்களை விநியோகித்து வருகிறார்கள்.
கடந்த 15 நாட்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் உணவு பொட்டலங்களை விநியோகித்து இருக்கிறார்கள்.
அவ்வாறு உணவு வழங்க செல்லும் வாகனங்களில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் உணவை வாங்கி செல்கிறார்கள்.
அவ்வாறு வாங்கும்போது சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை வீடற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் ... தான் புள்ளிவிபரம் சொல்கிறது. ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் விநியோகிக்கப்பட்ட உணவு பொட்டலங்கள் அதைவிட அதிகம் என்கிறார்கள்.