லைஃப்ஸ்டைல்
காலிபிளவர் குருமா

சப்பாத்திக்கு அருமையான காலிபிளவர் குருமா

Published On 2020-11-24 09:55 GMT   |   Update On 2020-11-24 09:55 GMT
சப்பாத்தி, இட்லி, தோசை, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையான சூப்பரான காலிபிளவர் குருமாவை செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

காலிபிளவர் - 1 சிறியது
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது

வறுத்து பொடிக்க :

பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
சோம்பு - 1 தேக்கரண்டி

தாளிக்க :

எண்ணெய் - தேவைக்கு
பட்டை - 1/2 இன்ச் அளவு
கிராம்பு - 1
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது  

அரைக்க :

தேங்காய் துருவல் - அரை கப்

செய்முறை :

வெந்நீரில் முழு காலிபிளவரை போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காலிபிளவரை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.   

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு மூன்றையும் பொன்னிறமாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

தேங்காயையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து  எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் பட்டை கிராம்பு பொடி, வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.  

தக்காளி நன்கு சுருள வதங்கியதும் காலிபிளவருடன் ஒரு கை தண்ணீர் தெளித்து வேகும் வரை நன்கு வதக்கவும்.

காலிபிளவர் நன்கு வெந்ததும் மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி 2 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.  

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

குருமா திக்கானதும் அதில் கொத்தமல்லித் தழையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான காலிபிளவர் குருமா ரெடி.

* இது சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News