செய்திகள்
மத்திய குழு

வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்தது

Published On 2021-11-21 08:50 GMT   |   Update On 2021-11-21 08:50 GMT
மத்திய குழுவில் ஏழு பேர் இடம்பிடித்துள்ள நிலையில், இரண்டு பிரிவாக பிரிந்து வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது. பயிர்கள் நீரில் மூழ்கின. சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. எனவே உடனடி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.550 கோடியும், முழுமையான நிவாரணமாக ரூ.2,079 கோடியும் வழங்க வேண்டும் என  கோரப்பட்டிருந்தது.

இதற்கிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் மத்திய மந்திரி அமித்ஷாவும் தொலைபேசியில் பேசி வெள்ள நிலைமை பற்றி கேட்டறிந்தார். அதன்படி, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் இன்று மதியம் சென்னை வந்தடைந்தனர்.

ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவில் விவசாயம், நிதி, நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இடம் பிடித்துள்ளனர்.

இவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்வார்கள். இந்தக்குழு வருகிற 24-ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்கிறது. அதன்பின் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும்.

Tags:    

Similar News