ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது

Published On 2019-11-05 06:53 GMT   |   Update On 2019-11-05 06:53 GMT
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்்சி நாளை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 25-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 26-ந் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி 5-ந் தேதி மோகினி அலங்காரமும், 6-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

12-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 13-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 15-ந் தேதி தீர்த்தவாரியும், 16-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை(புதன்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணிக்குள் நடைபெறுகிறது. முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேள, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி மரியாதை செலுத்துகிறது.

அதைத்தொடர்ந்து முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம் மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நடுகின்றனர். இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News