ஆன்மிகம்
ஐராவதேஸ்வரர், அலங்காரவல்லி

ரம்பையின் சாபம் நீக்கிய ஐராவதேஸ்வரர் கோவில்

Published On 2020-01-01 01:36 GMT   |   Update On 2020-01-01 01:36 GMT
தஞ்சாவூர் மாவட்டம் நேமம் என்ற ஊரில் ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் நேமம் என்ற ஊரில் ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ‘ஐராவதேஸ்வரர், பாரிஜாதவனேஸ்வரர், பிரம்மபுரேஸ்வரர், இந்திராபுரீஸ்வரர், புஷ்பபுரீஸ்வரர், ஐராவதபுரீஸ்வரர்’ என பல பெயர்களில் அழைக்கப்படு கிறார். இறைவியின் பெயர் ‘அலங்காரவல்லி’ என்பதாகும்.

தல வரலாறு

தேவலோக சபையில், அதன் தலைவரான இந்திரன், மற்ற தேவர்கள், தேவ ரிஷிகள் அமர்ந்திருந்தனர். சபையின் மையத்தில் ரம்பை, மேனகை, ஊர்வசி ஆகியோரது நடனம் அரங்கேற, அதற்கு நாரதர் வீணை வாசித்தார். அனைவரும் அந்த மூன்று அழகிகளின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆட்டம் முடிந்ததும் மற்ற இரு ஆடலரசிகள் சென்றுவிட, ரம்பை மட்டும் களைப்புடன் மேடையில் படுத்து உறங்கி விட்டாள். காற்று அவளது ஆடைகளை அகற்றுவதை அவள் உணரவில்லை. ஆடை கலைந்திருந்ததை உணராமல், வெட்கமின்றி படுத்திருந்த அவளைப் பார்த்தார் நாரதர்.

கோபம் தலைக்கேற “பூவுலகில் பிறந்து எந்தவித சொர்க்க சுகமும் இன்றி வாடுவாயாக” என சபித்தார்.

திடுக்கிட்டு எழுந்த ரம்பை நாரதரின் சாபத்தை உணர்ந்தாள்.

“நான் அறியாமல் செய்த தவறு இது. எனவே என்னை மன்னித்து சாபத்தை நீக்கி அருள்புரியுங்கள்” என நாரதரிடம் வேண்டினாள் ரம்பை.

“சிவபெருமானை வழிபடு. அவரது அருள்பெற்று சாபம் நீங்கப் பெறுவாய். பின்னர் சொர்க்கம் வந்து சேர்” எனக்கூறி மறைந்தார் நாரதர்.

ரம்பை பூலோகம் வந்தாள். பாலாற்றில் நீராடி பாடலீஸ்வரரை வழிபட்டாள். சூரியன் வழிபட்ட தலம் இது. அங்குள்ள முனிவர்களிடம் தன் நிலையைத் தெரிவித்தாள். அவர்கள் ரம்பைக்கு, பஞ்சாட்சர ஜெபத்தை உபதேசம் செய்தனர். அந்த மந்திரத்தை உச்சரித்தபடி ஈசனை வழிபட்டு வந்தாள், ரம்பை.

அதே வேளையில், இந்திர சபையில் ரம்பை இல்லாத குறையை இந்திரன் உணர்ந்தான். ரம்பை இல்லாத சபை அவனுக்கு இன்பம் அளிக்கவில்லை. பூவுலகில் ரம்பை தவம் செய்வதை அறிந்து அவளை அழைத்துவர சித்திரரதன் என்ற கந்தர்வனை அனுப்பினான். சித்திரரதன், ரம்பையை சந்தித்து இந்திரனின் விருப்பத்தைக் கூறினான். “சிவனது அருள் பெறாமல், என்னால் வானுலகம் வர இயலாது” என்று கூறி அனுப்பினாள் ரம்பை. இருந்தாலும் இந்திரனும் ஒவ்வொருவராக தூது அனுப்பியபடியே இருந்தான்.

தன்னுடைய தவத்திற்கு இந்திரனால் இடையூறு ஏற்படுவதை உணர்ந்த ரம்பை, தவம் செய்யும் இடத்தை மாற்ற எண்ணினாள். அதற்காக துர்வாச முனிவரை சந்தித்தாள். அவர், பிரம்மாவும் இந்திரனும் தவமிருந்து வழிபட்ட பாரிஜாதவனேஸ்வரரை வழிபடக் கூறினார்.

ரம்பை உடனே கும்பகோணத்திற்கு மேற்கே வலது கரையில் உள்ள பிரம்மேஸ்வரம் சென்று, காவிரியில் நீராடி மரவுரியும் மான் தோலும் உடுத்தி, விபூதியும் ருத்ராட்சமும் அணிந்து, மல்லி, ஜாதி, செண்பக மலர்களால் இறைவனை மூன்று வேளையும் வழிபட்டாள். ஓராண்டு காலம் இடையூறின்றி தவமிருந்தாள். அப்போது இந்திரன், தவம் செய்து கொண்டிருந்த ரம்பையை பலவந்தமாக தேவலோகம் அழைத்துவர ஐராவத யானையை அனுப்பினான்.

ஐராவதம் யானை, ரம்பையை தன் துதிக்கையால் தூக்கிச் செல்ல முயன்றது. ரம்பை, சிவலிங்கத்தை திடமாக பற்றிக்கொண்டாள். ஐராவதம் யானையும், சிவலிங்கத்தோடு ரம்பையை வளைத்து தூக்க முயன்றது. அப்போது சிவலிங்கம் பருத்து வளரத் தொடங்கியது. யானை தன் துதிக்கையை விடுவிக்க முடியாமல் தவித்தது. ரம்பையிடமும் கோடி சிங்கங்களின் வலிமை வெளிப்பட்டது. இறுதியில் யானை, லிங்கத்தின் முன்பாக ரத்தம் கக்கி தளர்ந்து விழுந்து உயிர்நீக்கும் நிலையை அடைந்தது.

ரம்பையையும் ஐராவதத்தையும் மீட்க வேறு வழி அறியாத இந்திரன், தனது விமானத்தில் ஏறி பாரிஜாத வனம் வந்து இத்தல ஈசனைத் துதித்தான். சிவபெருமான் எதிரில் தோன்றி தன்னை பயத்தால் இறுக அணைத்திருந்த ரம்பைக்கும், உயிர் நீக்கும் தருவாயில் இருந்த ஐராவதத்திற்கும் ஆறுதல் அளித்தார். ரம்பையும், இந்திரனும், ஐராவதமும் தேவலோகம் சென்றனர். அங்கிருந்து தெய்வ மரங்களின் பூக்களை மழையாகப் பொழிந்தனர். எனவே பூக்களால் நிறைந்த இத்தலம் ‘புஷ்பபுரம்’ என்று அழைக்கப்பட்டது. பாரிஜாத வனம், ஐராவதபுரம், புஷ்ப புரம் என அழைக்கப்பட்ட அந்த தலமே தற்போது ‘நேமம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆலய அமைப்பு

ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் சிறு விமானமும், ராஜகோபுரமும் உள்ளன. அடுத்து நந்தி மண்டபம் உள்ளது. இங்கு நந்தி பகவான் தரை மட்டத்தில் இருந்து இரண்டரை அடி பள்ளத்தில் காட்சி தரு கிறார். அருகே உள்ள காவிரி நதியில் வெள்ளம் வரும்போது தண்ணீர் ஊற்றெடுத்து நந்தியின் செவிகள் வரை நிற்குமாம். இந்த நந்தி பகவானின் முன்பு, மழை வேண்டி வருண ஜெபம் செய்தால் நிச்சயம் மழை பெய்யும் என் கிறார்கள்.

மணிமண்டபத்தை அடுத்து மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் இடதுபுறம் லட்சுமி நாராயண பெருமாள் சன்னிதி உள்ளது. அடுத்து அர்த்த மண்டபம். அதையடுத்த கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்கத்திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஆலய திருச்சுற்றில் விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர்.

ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். ஆலயத்தின் தீர்த்தங்கள் மூன்று. அவை, பிரம்ம தீர்த்தம். ஸூதா கூபம், காவிரி ஆகும். பிரம்ம தீர்த்தம் பிரம்மாவால் அமைக்கப்பட்டது. ஸூதா கூபம் என்பது கிணறு. இது ஆலயத்தின் தென்திசையில் உள்ளது. காவிரி ஆலயத்தின் வட திசையில் ஓடுகிறது. ஆலயத்தின் பின்புறம் ஒரு பெரிய திருக்குளம் உள்ளது.

பல நூறாண்டுகள் பழமையான இந்த ஆலயம், தினமும் காலை 6.30 மணி முதல் 10 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இரண்டு அம்மன்கள்


மகாமண்டபத்தின் வலதுபுறம் இரண்டு அம்மன் சன்னிதிகள் உள்ளன. முதலில் உள்ளது ஆதி அலங்கார வல்லியின் சன்னிதி. இந்த அம்மனேஆலயத்தில் முதலில் இருந்தது. ஒருநாள் திடீரென்று அம்மன் சிலை காணாமல் போனது. அதையடுத்து புதியதாக ஒரு சிலையை செய்து வைத்தனர். அந்த அம்மனின் பெயரும் அலங்காரவல்லிதான்.

இந்த நிலையில் ஒரு நாள் ஆலய அர்ச்சகர் கனவில் வந்த ஆதி அம்மன், “நான் காவிரி மணலில் புதையுண்டு கிடக்கிறேன். என்மேல் எந்த பின்னமும் இல்லை. என்னை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழக்கம் போல் அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்” எனக்கூறி மறைந்தது. அதன்படி அந்த அம்மனின் சிலையை கண்டுபிடித்து மீண்டும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர். அந்த அம்மனே ஆதி அலங்காரவல்லி.

அமைவிடம்


தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில், 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நேமம் என்ற இந்த தலம். சாலையின் ஓரத்திலேயே ஆலயம் இருக்கிறது.

ஜெயவண்ணன்
Tags:    

Similar News