செய்திகள்
ஈரோடு மாநகராட்சியில் இன்று தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஈரோடு மாநகராட்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்களில் 1700 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 1200 பேர் ஒப்பந்தப்ப அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 1200 தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் டிரைவர்கள் உள்ளிட்ட பணி இடங்களையும் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், பொதுச்செயலாளர் மாணிக்கம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் இன்று வேலைக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு நிரந்தர பணியாளர்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் தூய்மை பணி மற்றும் வீடுகளுக்கே சென்று குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது.