உள்ளூர் செய்திகள்
சந்தனக்கூடு ஊர்வலத்தில் பொதுமக்களுக்கு தடை-கலெக்டர் அறிவிப்பு
நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் அங்கு நடைபெறும் தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், நாகை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் போடும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்று முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயது தாண்டியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் என 1451 பேருக்கு போடப்படுகிறது. வரும் 31-ந்தேதிக்குள் 11,000 பேர் பூஸ்டர் டோஸ்தடுப்பூசி போட தகுதி உடையவர் ஆகிறார்கள்.
நாகை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 82.18 சதவீதமும்,
இரண்டாம் தவணை 70 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளியூர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் பலர் வேலை செய்வதால் மாவட்டத்தில் சராசரியாக தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 90 சதவீதம் ஆகும்.
கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை தடுக்க கூட்டம் கூடுவதை தவிர்த்து கட்டாயமாக கவசம் அணிய வேண்டும். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு விழாவில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.