செய்திகள்
விபத்து பலி

ராயபுரத்தில் மாநகர பஸ் மோதி மாநகராட்சி ஊழியர் பலி

Published On 2021-09-27 10:24 GMT   |   Update On 2021-09-27 10:24 GMT
ராயபுரத்தில் மாநகர பஸ் மோதி மாநகராட்சி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

ராயபுரம், செட்டி தோட்டப் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 23). மாநகராட்சி குப்பை லாரிகளில் பழுது பார்க்கும் மெக்கானிக் பணி செய்து வந்தார்.

நேற்று இரவு அவர், சிமெண்ட்ரி சாலை ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவான்மியூரில் இருந்து டோல்கேட் செல்லும்(6டி) மாநகர பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கிய ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோசிமேடு போக்குவரத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் பாக்யராஜை கைது செய்து விசாரணை செய்து வரு கின்றனர்.

ஆகாஷின் உறவினர்கள் கூறுகையில், ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு சாலையில் இருபுறமும் போக்கு வரத்துக்கு இடையூறாக கார்கள் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி வருவதால் சாலை குறுகலாக உள்ளது.

வட சென்னையில் பல பகுதிகளுக்கு ராயபுரத்தில் உள்ள குடிநீர் வாரியத்தில் இருந்து லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்வதாலும் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுகிறது.

அந்த வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வாகனங்களை அப்புறப்படுத்தி இருந்தால் விபத்து ஏற்பட்டு இருக்காது என்று கூறினார்.

பலியான ஆகாசுக்கு பெற்றோர் இல்லை. ஒரு தங்கை மட்டும் உள்ளார்.

Tags:    

Similar News