லைஃப்ஸ்டைல்
பச்சிளம் குழந்தை அஜீரணக்கோளாறால் அவதிபட்டால் என்ன செய்யலாம்

பச்சிளம் குழந்தை அஜீரணக்கோளாறால் அவதிபட்டால் என்ன செய்யலாம்

Published On 2020-06-10 06:59 GMT   |   Update On 2020-06-10 06:59 GMT
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறைகளை கடைபிடித்தாலே பச்சிளம் குழந்தையின் அஜீரணக்கோளாறுகள் சரியாகிவிடும். அப்படியும் குழந்தை தொடர்ந்து பால் கக்குதல், அஜீரணக்கோளாறால் அவதிபட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
பெரும்பாலும் கைக்குழந்தைகள் அவதிப்படுவதற்கு முதன்மையான காரணம் வயிற்று வலியை உண்டாக்கும் உபாதைகள் தான். அதிலும் குறிப்பாக அஜீரணக்கோளாறுகள் என்றே சொல்லலாம்.  4 மாதத்துக்குட்பட்ட பச்சிளங்குழந்தைகளில் 50% குழந்தைகள் அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. இவை சாதாரணமாக இருந்தாலும் குழந்தையின் ஜீரணமண்டலம் சீராக செயல்பட உரிய சிகிச்சையும் அளிக்க வேண்டும். அதற்கு வீட்டிலேயே செய்யகூடிய சிகிச்சைகள் குறித்து பார்க்கலாமா?

குழந்தைகள் தாங்கள் அஜீரணக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் பால் கக்கும் போது தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை . அதற்கு முன்னரே சில அறிகுறிகளை உணர்த்துவார்கள்.

தாய்ப்பால் கொடுக்கும் போது பெரும்பாலும் முதுகை வளைத்தபடியே குடிப்பார்கள். பாலை முழுமையாக குடிக்க மாட்டார்கள். விக்கல் வழக்கட்தை விட அதிகமாக இருக்கும்.ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். இதனாலும் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உண்டாகலாம். இவை சாதாரணமாக உண்டாகும் பாதிப்புதான் என்பதால் கைவைத்தியத்திய முறையில் சரிசெய்துவிடமுடியும். அப்படி செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

குழந்தைகளுக்கு வாயு பிரச்சனையால் வயிறுவலி அஜீரணம் உண்டாகியிருந்தால் முதலில் வலியை குறைக்க முயற்சிக்கலாம். இதனால் குழந்தை அழுதுகொண்டே இருக்கும். மிருதுவான துணியை வெதுவெதுப்பான நீரில் முக்கி நீரை பிழிந்து குழந்தையின் மார்பு பகுதியில் இருந்து வயிறுவரை மெதுவாக ஒத்தடம் கொடுத்தபடி இலேசாக அழுத்தி அழுத்தி எடுக்கலாம். இதனால் குழந்தையின் உடலிலிருக்கும் வாயு பிரிந்து ஜீரணம் எளிதாக இருக்கும். தினமும் காலை மற்றும் மாலை வேளையில் இது போல் செய்துவரலாம்.

தாய்ப்பால் குடித்ததும் குழந்தைகள் ஏப்ப விடும் வரை படுக்கையில் கிடத்தவேண்டாம். அம்மாக்கள் குழந்தையை அணைத்தபடி மடியிலேயே வைத்திருப்பார்கள். அப்படி செய்தால் குழந்தைக்கு ஏப்பம் வராமல் அதனாலும் அஜீரணம் உண்டாகலாம். அதோடு குழந்தை பால் குடிக்கும் போது பால் உறிஞ்சுவதோடு காற்றையும் சேர்த்து உறிஞ்சு கொள்ளவும் வாய்ப்புண்டு.

அதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததும் அவர்களை தோளில் நிற்கும் படி வைத்து தட்டி கொடுக்க வேண்டும். ஐந்து முதல் பத்துநிமிடங்கள் வரை தட்டி கொண்டெ இருந்தால் குழந்தைக்கு ஏப்பம் வரும் பிறகு படுக்கையில் கிடத்தலாம். இதனால் அஜீரணக்கோளாறு சரியாகும்.

சிலருக்கு அஜீரணம் பிரச்சனை உண்டாகும் பொது மலச்சிக்கலும் கூடவே இருக்கும். அதனால் குழந்தையை மலச்சிக்கலிலிருந்து விடுபட வைக்க வேண்டும்.

தினமும் காலையில் குழந்தையை குளிக்க வைக்கும் முன்பு சுத்தமான தேங்காயெண்ணெய் அல்லது சோம்பு, பெருஞ்சீரக எண்ணெய் கிடைக்கும். இதை தேங்காயெண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம்.

இந்த எண்ணெயை சிறிது எடுத்து உள்ளங்கையில் தடவி குழந்தையின் தொப்புளை சுற்றி தடவவேண்டும். பிறகு உள்ளங்கையை வைத்து குழந்தையின் வயிற்றை மென்மையாக கடிகார திசையில் மசாஜ் செய்யவேண்டும். இதனால் வயிற்றில் இருக்கும் வாயு வெளியேறும். இரண்டு காலையும் இலேசாக மசாஜ் செய்து ஒவ்வொரு காலையும் நீட்டி மடக்கி பொறுமையாக செய்யவேண்டும். இதனால் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துவதோடு செரிமானப்பிரச்சனையும் நீங்கும்.

மூன்று மாதம் ஆன பிறகு குழந்தைக்கு செரிமானத்துக்கு ஓம வாட்டரை கொடுப்பது உண்டு. இதை வெளியில் வாங்காமல் நீங்களே வீட்டில் தயாரித்து கொடுப்பதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

அஜீரணக்கோளாறு என்பது எளிதாகவே சரி செய்யகூடியது தான். எனினும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது உணவில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பால் ஒப்புக்கொள்ளாமல் குழந்தைக்கு செரிமானக்கோளாறு, அஜீரணம், மலச்சிக்கல் என்று உண்டாக்கிவிடும்.

இந்த முறைகளை கடைபிடித்தாலே பச்சிளம் குழந்தையின் அஜீரணக்கோளாறுகள் சரியாகிவிடும். அப்படியும் குழந்தை தொடர்ந்து பால் கக்குதல், அஜீரணக்கோளாறால் அவதிபட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். 
Tags:    

Similar News