செய்திகள்
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலத்திற்காக வைக்கப்பட்டிருந்த பருத்தி மூட்டைகளை காணலாம்.

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

Published On 2021-07-16 10:50 GMT   |   Update On 2021-07-16 10:50 GMT
விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை ஏலத்துக்கு விவசாயிகள் வைத்திருந்தனர்.

இந்த ஏலத்தில் விழுப்புரம், பண்ருட்டி, செம்பனார்கோவில், தேனி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச் சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர்.

இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர்செந்தில் முருகன், மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.

இதில் அதிகபட்சமாக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 389-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 509-க்கும், சராசரியாக ரூ.6 ஆயிரத்து 646-க்கும் ஏலம் போனது.

இந்த ஏலத்தில் 3 ஆயிரத்து 574 குவிண்டால் பருத்தி ரூ.2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.
Tags:    

Similar News