ஆன்மிகம்
மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்த போது எடுத்த படம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது: 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

Published On 2021-11-03 03:14 GMT   |   Update On 2021-11-03 03:14 GMT
சித்திரை ஆட்ட சிறப்பு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. சாமி தரிசனத்துக்கு 15 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை ஆட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை ஆட்ட சிறப்பு பூஜை இன்று (புதன்கிழமை) சபரிமலையில் நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கிருந்த பக்தர்களுக்கு தந்திரி பிரசாதம் வழங்கினார்.

தொடர்ந்து இன்று சித்திரை ஆட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. அதன்பின்னர் வழிபாடுகளுக்கு பின் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நடை திறக்கப்படுவதை முன்னிட்டு சாமி தரிசனத்திற்கு முன்பதிவு அடிப்படையில் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ததற்கான நெகட்டிவ் சான்றிதழ் (72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டது) கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 15-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 16-ந் தேதி முதல் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
Tags:    

Similar News