செய்திகள்
உழவர் சந்தைக்கு வந்த கலெக்டரிடம் வியாபாரிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்த போது எடுத்த படம்.

சிவகங்கை உழவர் சந்தையில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2020-11-19 09:24 GMT   |   Update On 2020-11-19 09:24 GMT
சிவகங்கை உழவர் சந்தையில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் தேங்காதபடி சரி செய்ய உத்தரவிட்டார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேற்று காலையில் சிவகங்கை உழவர் சந்தையில் ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த வியாபாரிகளிடம் அவர்கள் விற்பனைக்கு வைத்துள்ள காய்கள் அவர்கள் உற்பத்தி செய்ததா அல்லது விலைக்கு வாங்கி விற்பனை செய்கிறார்களா என்று கேட்டறிந்தார். பின்னர் அவர் உழவர் சந்தை பகுதியில் போதுமான வசதிகள் உள்ளதா என்று பார்வையிட்டார். கலெக்டர் வரும்போது உழவர் சந்தையில் மழைநீர் தேங்கி இருந்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் உடனடியாக மழைநீர் தேங்காதபடி நீரை வெளியேற்றி சரி செய்ய அவர் உத்தரவிட்டார். மேலும் உழவர்சந்தையில் காய்கள் விற்பனை செய்பவர்கள் தங்களுக்கு பயன்படுத்துவதற்கு வசதியாக கழிப்பறை அமைத்து தர வேண்டும் என்றும், உழவர்சந்தையில் கூடுதல் கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என்றும் தண்ணீர் தேங்கி நிற்காத அளவிற்கு தரையை சரிபடுத்தி தர வேண்டும் என்றும் கலெக்டரிடம் தெரிவித்தனர்.

பின்னர் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, சிவன்கோவில் அருகேயுள்ள அம்மா உணவகத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள சமையல் அறை சுத்தமாக உள்ளதா என்று பார்வையிட்ட கலெக்டர் தினசரி எவ்வளவு உணவு தயாரிக்கப்படுகிறது என்றும் கேட்டறிந்தார். பின்னர் அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களிடம் உணவு தரமாக உள்ளதா என்ற கேட்டறிந்தார். ஆய்வின் போது சிவகங்கை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், நகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News