செய்திகள்
துணை ராணுவத்தினர்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்த 1,500 துணை ராணுவத்தினர் சொந்த ஊர் திரும்பினர்

Published On 2021-04-09 03:20 GMT   |   Update On 2021-04-09 03:20 GMT
தமிழகத்தில் பாதுகாப்புக்காக வந்திருந்த சுமார் 45-க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவத்தினர் படிப்படியாக சொந்த மாநிலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைந்தது. தேர்தல் வாக்குப்பதிவின்போது சென்னையில் மட்டும் 23,500 போலீசார் ஈடுபட்டனர். மேலும், வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 18 மத்திய காவல் படையினர், 10 சிறப்பு காவல் படையினர், 3 ஆயிரம் ஊர்காவல் படையினர், 1,800 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஊர்காவல் படையினர், 700 ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் என மொத்தம் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தற்போது வாக்கு எண்ணும் மையங்களிலும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதுகாப்புக்காக வந்திருந்த சுமார் 45-க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவத்தினர் படிப்படியாக சொந்த மாநிலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

அதன்படி, நேற்று மாலை 5 மணியளவில் 8 கம்பெனி துணை ராணுவத்தினர், இரவு 10-க்கு மேல் மற்றொரு 8 கம்பெனி துணை ராணுவத்தினர் என சென்டிரலில் இருந்து ராஜஸ்தானுக்கு புறப்பட்டனர். மொத்தம் 1,500 துணை ராணுவத்தினர் நேற்று சென்னையில் இருந்து வடமாநிலம் சென்றுள்ளனர். மீதம் உள்ளவர்களும் படிப்படியாக சொந்த மாநிலம் செல்ல உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News