வேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாத பெண்கள் 310 பேர் மீது வழக்கு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கட்டாய ஹெல்மெட் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் பெரும்பாலான பெண்கள் லைசென்சு இல்லாமலும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி சாலை விபத்துகளை ஏற்படுத்துவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் வந்தது.
இதனையடுத்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
மேலும் வாகன தணிக்கை செய்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. இதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற பெண்கள் 310 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் காட்டன், லாட்டரி விற்பனை மணல் திருட்டை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 95 மணல் திருட்டு வழக்கு,660 சாராய வழக்கு, 2 கஞ்சா வழக்கு, 19 புகையிலை வழக்கு, 12 லாட்டரி விற்பனை, 17 காட்டன் சூதாட்ட வழக்கு உள்பட மொத்தம் 807 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.