செய்திகள்
ஒன்றிய செயலாளர்-மனைவி மீது தாக்குதல்: விஜயகாந்த் கண்டனம்
விருத்தாசலம் அருகே ஒன்றிய செயலாளர்-மனைவி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஊ.அகரம் கிராமத்தை சேர்ந்தவரும், கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான தங்க.பொன்தனசேகர் இரவு மாற்றுக் கட்சியினரால் வீடு புகுந்து தாக்கப்பட்டார். அவருடைய மனைவியும், கம்மாபுரம் தே.மு.தி.க. ஒன்றிய கவுன்சிலருமான சங்கீதா, அவருடைய தாயார் மற்றும் குடும்பத்தினரும் கடுமையாக தாக்கப்பட்டனர். தே.மு.தி.க.வினர் மீது மாற்றுக் கட்சியினர் தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற இழிவான செயல்களில் யார் ஈடுபட்டாலும், அதனை தே.மு.தி.க. பொறுத்துக்கொள்ளாது.
தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.