பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பூமலூர் ஊராட்சியில் உள்ளது நடுவேலம்பாளையம் கிராமம். இங்கு 700-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அத்திக்கடவு குடிநீர் குழாய் முலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் சரியாக வரவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் நடுவேலம் பாளையம்-பல்லடம் ரோட்டில் காலிக் குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் மற்றும் பூமலூர் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரை மணி நேரமாக நடைபெறும் இந்த போராட்டத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.