செய்திகள்
ஊரடங்கு

மேற்கு வங்காளத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 1 வரை நீட்டிப்பு

Published On 2021-06-14 17:58 GMT   |   Update On 2021-06-14 17:58 GMT
ஊரடங்கின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத கடைகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்காள அரசு தெரிவித்துள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை மாதம் 1-ம் தேதி வரை மேலும் சில தளர்வுகளுடன் நீட்டித்து, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, கொல்கத்தாவில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:



மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு ஜூலை மாதம் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். தனியார் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

வணிக வளாகங்களில் உள்ள கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

உணவகங்கள் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.

மாநிலம் முழுவதும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத கடைகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News